இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவான நபர்கள் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 6 கோடி அளவுக்குக் குறைந்துவிட்டதாகவும், உடல் பருமன் மிக்கவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதே சமயம், உடல் பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும், உடல் பருமன் மிக்க பெரியவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் உணவு பாதுகாப்பு மற்றும் சத்துணவு குறித்த நிலை அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், 2019-ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 69 கோடி மக்கள் போதிய உணவு கிடைக்காமல் பசியோடு இருப்பதாகவும் இது 2018ஆம் ஆண்டைக் காட்டிலும் 1 கோடி மக்கள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், இந்தியாவில் போதிய சத்துணவு கிடைக்காமல் வாழும் மக்களின் எண்ணிக்கை 2004-06-ஆம் ஆண்டில் 24 கோடியாக இருந்து 2017 - 19ல் 18 கோடியாக அதாவது 6 கோடி அளவுக்குக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உடல் பருமனோடு இருப்பது 2012ஆம் ஆண்டு 47.8%ல் இருந்து 2019ல் 34.7% ஆக அதாவது 6 கோடியில் இருந்து 4 கோடியாகக் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 2012 - 16 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உடல் பருமனோடு இருக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, உடல் பருமனோடு இருக்கும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டு 25.2% இல் இருந்து 2016ஆம் ஆண்டில் 34.3% ஆக உயர்ந்துள்ளது.