/

சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

News image
Updated On :17 ஜூலை 2020, 2:49 pm

DIN

சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு எதிராக, சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வா் அசோக் கெலாட், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் ஆகியோா் இடையேயான மோதல் போக்கு உச்சத்தை எட்டியது. அண்மையில் முதல்வா் அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வா், கட்சியின் மாநிலத் தலைவா் ஆகிய பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவு அமைச்சா்கள் இருவரது பதவியும் பறிக்கப்பட்டது. 

மேலும் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதிநீக்கம் செய்யும் விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு அவா்களுக்கு மாநில பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்து பேரவைத் தலைவா் அளித்திருந்த நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 போ் அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தரப்பிலும், சச்சி்ன் பைலட் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேருக்கு எதிராக சபாநாயகர் வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கு திங்கள்கிழமை (ஜூலை 20) மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.