பெங்களூரு: பணப்புழக்கத்தைக் குறைத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பதுதான் மத்திய அரசின் முக்கியக் கொள்கையாக இருந்த நிலையில், பொது முடக்கக் காலத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் நடைமுறை குறைந்து, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு இறுதி காலாண்டிலேயே செல்லிடப்பேசி மற்றும் பண அட்டைகள் மூலம் பொது மக்கள் செலுத்திய தொகை ரூ.10.57 லட்சம் கோடியாக இருந்த நிலையில், ஏடிஎம்மில் எடுத்த தொகை ரூ.9.12 லட்சம் கோடியாகக் குறைந்தது.
இந்த நிலையில்தான் 2020ஆம் ஆண்டு முதல் காலாண்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சற்று அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது 5% அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது பண அட்டை அல்லது செல்லிடப்பேசி மூலம் பொதுமக்கள் பணப்பரிவர்த்தனை செய்திருக்கும் தொகையானது ரூ.10.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஏடிஎம்மில் பொதுமக்கள் எடுத்தத் தொகை ரூ.8.66 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.
ஏற்கனவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டதாகவும், கரோனா பொதுமுடக்கம் அதனை உத்வேகத்தோடு செலுத்தியிருப்பதாகவும் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.