கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரது 8 நாள் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது என்ஐஏ காவலை ஜூலை 24-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவையும் ஜூலை 24-ஆம் தேதியே நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.