

புது தில்லி: ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டா் விவகாரம் தொடர்பாக உ.பி மாநில அரசு பரிந்துரைத்த மூன்று பேர் விசாரணை ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டா் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும், அம்மாநிலத்தில் குற்றவாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் இடையிலான தொடர்பு குறித்து விரிவாக ஆராயவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வின் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது உ.பி மாநில அரசின் சார்பாக ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கு தொடர்பாக சட்ட ரீதியிலான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சவுஹான் தலைமையில், அலஹாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சசிகாந்த் அகர்வால் மற்றும் ஓய்வுபெற்ற மாநில டிஜிபி குப்தா ஆகியோரின் பெயர்கள் அடங்கிய மூன்று பேர் விசாரணை ஆணைய முன்மொழிவு மற்றும் அதன் சட்ட விசாரணை வரம்புகளை மாநில அரசின் சார்பில் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
அதன்பின்னர் தலைமை நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:
உத்தரப்பிரதேச மாநில அரசானது இனி மாநிலத்தில் உள்ள பயங்கர ரவுடிகளை ஒழித்துக் கட்ட என்கவுன்டரை கையாளக் கூடாது. இந்த மூன்று பேர் விசாரணை ஆணையம் மற்றும் அதன் விசாரணை வரம்பு நெறிமுறைகளை நாங்கள் அங்கீகரித்து உத்தரவிடுகிறோம். இது உடனே மாநில அரசு சார்பில் அறிவிப்பாக வெளியிடப்பட வேண்டும். இன்றில் இருந்து ஒரு வாரத்திற்குள் இந்த ஆணையமானது லக்னௌவை தலைமையிடமாகக் கொண்டு தனது விசாரணையைத் துவக்கலாம். ஆணையத்திற்குத் தேவையான துறைசார் உதவிகள் அனைத்தும் மத்திய அரசால்தான் வழங்கப்பட வேண்டும்.
தற்போது நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள தரப்பினர் யாராக இருந்தாலும், இந்த ஆணையத்தில் தங்களை விசாரிக்குமாறு மனுதாக்கல் செய்து இணைந்து கொள்ளலாம்.
அதேநேரம் மாநில அரசால் முன்னரே நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவானது இந்த வழக்கு தொடர்பாக, தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு எதுதொடர்பாகவும் விசாரிக்கலாம்.
இந்த விவகாரம் அதிக கவன ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது என்பதற்காக நீதிமன்றம் ஒரு கிரிமினல் வழக்கு விசாரனையை மேற்பார்வை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.