மும்பை: அரபிக்கடலில் உருவான ‘நிசா்கா’ புயல், வடக்கு மகாராஷ்டிரத்தின் அலிபாக் பகுதிக்கு அருகே இன்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் வீசியக் காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
ராய்காட் மாவட்டத்தில் இருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீவர்தன் பகுதியில் நிசர்கா புயல் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததாக மாவட்ட ஆட்சியர் நிதி சௌத்ரி தெரிவித்துள்ளார்.
நிசர்கா புயலின் கண் போன்ற பகுதி மட்டும் சுமார் 60 கி.மீ. விட்டம் கொண்டதாக இருந்தது. இது ராய்காட் மாவட்டத்தைக் கடந்து உரன் பகுதியை நோக்கிப் பயணிக்கிறது.
புயல் கரையைக் கடப்பதையொட்டி, ஏற்கனவே ராய்காட், மும்பை, தாணே, நாசிக், துலே உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 13 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை வரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நிசர்கா புயல் இன்று பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக முற்பகலிலேயே கரையைக் கடக்கத்தொடங்கியது.
மகாராஷ்டிர மாநிலம் அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையைக் கடக்க ஆரம்பித்தது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 115 கி.மீ. வேகத்தில் வீசியது.
இதையொட்டி, இவ்விரு மாநிலங்களிலும் முன்னேற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த புயல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் காலை முதலே கன மழை பெய்து வருகிறது.