லக்னௌ: உடல்நலக்குறைபாடு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டான்டனின் உடல்நிலை தேறிவருகிறது.
மத்திய பிரதேச ஆளுநராகப் பணியாற்றி வருபவர் பாஜகவைச் சேர்ந்தவரான லால்ஜி டான்டன். இவர் கடந்த சனிக்கிழமையன்று காய்ச்சல் மற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகளுக்காக, லக்னௌவில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டு முடிவு நெகடிவ் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மேதாந்தா மருத்துவமனையின் இயக்குநர் ராகேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு வந்து, லால்ஜி டான்டனின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.