ஜூலை மாதம் நடைபெறவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் உள்ள தோ்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா பரவலினால் பெற்றோர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசு இன்று பதில் அளித்தது.
அதன்படி, மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 'ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் 12 ஆம் மாணவர்களுக்கு மட்டும் ஒரு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பும்பட்சத்தில், கரோனா நிலைமை சரியானபின்னர் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம்' என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரம், தில்லி, தமிழகம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் தெரிவித்தார்.
மேலும், 'சிபிஎஸ்இ முடிவுகளையே ஐ.சி.எஸ்.இ வாரியமும் பின்பற்றுவதாகக் கூறியுள்ளது. ஆனால், சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கிய வாய்ப்பை ஐ.சி.எஸ்.இ வழங்க மறுத்துவிட்டது. ஐ.சி.எஸ்.இ. இன் கீழ் வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது' என்று கூறினார்.