

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகக் கூறி, தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், நான் கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறேன். தற்போது கட்சியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்.
மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம், ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்தால் அந்த நோக்கம் நிறைவேறாது என்று கருதுகிறேன்.
எனவே, எனது மக்களுக்காகவும், எனது ஆதரவாளர்களுக்காகவும் சிறப்பாக பணியாற்றும் வகையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளேன்.
இது நாள் வரை பணியாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்கு வந்த ஆதிராதித்ய சிந்தியா, தற்போது அங்கு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 114 உறுப்பினா்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர் என்று கூறப்படும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, முதல்வர் பதவி வழங்கப்படாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மாநிலங்களவைப் பதவி அவருக்கு கிடைப்பதிலும் சிக்கல் நீடித்ததால், மேலும் அதிருப்தி அடைந்த ஜோதிராதித்யா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். விரைவில் அவர் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.