/

தில்லி வன்முறை திட்டமிட்ட சதி: மக்களவையில் அமித் ஷா பேச்சு

தில்லி வன்முறை திட்டமிட்ட சதியாகும். தில்லி வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இதை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2020, 6:09 pm

DIN

தில்லி வன்முறை திட்டமிட்ட சதியாகும். தில்லி வன்முறைக்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தை யாரும் அரசியலாக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 25-க்குப் பிறகு வன்முறையே நிகழவில்லை என்றும் மக்களவையில் பேசுகையில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

மக்களவையில் தில்லி வன்முறை குறித்த விவாதத்துக்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"பிப்ரவரி 25-க்குப் பிறகு கலவரம் எதுவும் நடக்கவில்லை என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த வன்முறையை அரசியலாக்குவதற்கான முயற்சிகள் அரங்கேறின. 

தில்லி காவல் துறையினர் என்ன செய்து கொண்டிருந்தனர் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. காவல் துறையினர் அப்போது களத்தில்தான் இருந்தனர். அவர்கள் விசாரணை நடத்தி வரும் நாட்களில் அறிக்கையைத் தாக்கல் செய்வார்கள். மற்ற இடங்களுக்கும் வன்முறை பரவாமல் தடுத்ததற்கு தில்லி காவல் துறையினரைப் பாராட்டுகிறேன். 36 மணி நேரத்தில் தில்லி காவல் துறையினர் வன்முறையைக் கட்டுப்படுத்தினர்.

நான் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தாஜ்மஹாலுக்கோ அல்லது குடியரசுத் தலைவர் அளித்த விருந்திலோ பங்கேற்கவில்லை. தில்லி வன்முறை குறித்து அலுவலர்களுடன் வியூகம் வகுத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அறிவுறுத்தலின்பேரிலேயே தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதே பிரதானமாக இருந்தது.

வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதைகள் குறுகலாக இருந்ததால் தில்லி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றடைவது கடினமாக இருந்தது. வன்முறை நீடித்ததற்கு சமூக விரோதிகளே காரணம்" என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.