மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், ஓடும் இரண்டு கார்கள் மீது ஏறி நின்று சிங்கம் பட பாணியில் ஸ்டண்ட் செய்த காட்சி வலைத்தளங்களில் வைரலானது. ஆனால், அவருக்கு பாராட்டுகள் குவியும் என்று பார்த்தால், அபராதம்தான் குவிந்தது.
காவல்துறை உதவி ஆய்வாளர் மனோஜ் யாதவுக்கு இதுபோல அபாயகரமான முறையில் ஸ்டண்ட் செய்து விடியோ வெளியிட்டக் குற்றத்துக்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தாமோஹ் மாவட்டம் நரசிங்ககர்ஹ் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் மனோஜ் யாதவ், இதுபோன்று எதிர்காலத்திலும் எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றுபோல சாலையில் வர, அதன் மீது ஏறி நின்று காவலர் மனோஜ் யாதவ் கையசைத்தபடி வரும் விடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இது இளைய தலைமுறையினருக்கு தவறான கருத்தைக் கொண்டு சென்று சேர்த்துவிடும் என்று கருதிய காவல்துறை ஆய்வாளர் சாகர் ராங்கே, இது பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தாமோஹ் காவல்துறை கண்காணிப்பாளர் ஹேமந்த் சௌஹானுக்கு உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய சௌஹான், மனோஜ் யாதவுக்கு ரூ.5,000க்கு அபராதம் விதித்ததோடு, இதுபோன்றதொரு தவறை மீண்டும் செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.