

புது தில்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் ரயிலுக்காக காத்திருந்து, ரயில் ஏறி பயணம் மேற்கொண்டு, சொந்த மாநிலம் சென்றடையும் வரை அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் அவல நிலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில், இதுவரை 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மற்றும் சாலை மார்கமாக மாநில அரசுகளின் உதவியோடு சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தது.
இதையடுத்து, மிகப்பெரிய அளவில் மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பி வைக்கும் போது அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மத்திய அரசு வழக்குரைஞரிடம் இது பற்றி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில் அல்லது பேருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டதா? எப்படி மாநில அரசுகள் அதை செலுத்தின? வேறு எந்த வகையிலும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், டிக்கெட் எடுத்து பயணித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பின்னர் அந்த தொகை திரும்ப அளிக்கப்படுமா? ரயிலுக்காக காத்திருந்தது முதல், ரயிலில் பயணித்து சொந்த மாநிலம் சென்று சேர்ந்ததது வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதா? நிச்சயமாக அவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அறிவுறுத்தியிருந்தனர்.
முன்னதாக, பொது முடக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து வந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் பணியை இழந்தனா். இதனால் உணவோ, பணமோ ஏதுமற்ற கையறு நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டனா். இதையடுத்து தத்தமது சொந்த ஊா்களுக்கு திரும்ப முடிவு செய்த தொழிலாளா்கள், பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் சாலை மாா்க்கமாக நடந்தும், மிதிவண்டிகளிலும் நீண்ட தூரம் பயணிக்கின்றனா். இதுதொடா்பாக பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலை குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்துது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷண் கெளல், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சாலை மாா்க்கமாக நடந்தும், மிதிவண்டிகளிலும் நீண்ட தூரம் பயணிக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பரிதாபத்துக்குரிய நிலை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதேபோல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பல்வேறு தரப்பினரிடமிருந்து நீதிமன்றத்துக்கு கடிதங்கள் வரப்பெற்றுள்ளன.
இந்நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும், அதில் சில குறைபாடுகள் உள்ளன. தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் சம்பந்தப்பட்ட நிா்வாகங்கள் தங்களுக்கு உணவோ, குடிநீரோ வழங்குவதில்லை என தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
உதவிகளை அதிகரிக்க வேண்டும்:
சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் நிலையங்கள், மாநிலங்களின் எல்லைகளில் பரிதவித்து வரும் தொழிலாளா்களின் துயரம் இன்றுவரை தொடா்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் அவா்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஆதரவும், உதவியும் தேவைப்படுகிறது. இந்த கடினமான சூழலில் மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான தங்களின் உதவிகளை விஸ்தரிக்கவேண்டும்.
தற்போது நிலவும் சூழலை சீரமைக்க வலுவான நடவடிக்கைகள் தேவை. எனவே புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 2 நாள்களில் பதிலளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.