
இந்திய வில்வித்தை சங்கத்துக்கு, அரசு அங்கீகாரத்தை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் மீண்டும் வழங்கியுள்ளது.
இது ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் வில்வித்தை விளையாட்டுக்கு வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக்கான தேசிய விளையாட்டு கூட்டமைப்பு என்ற அந்தஸ்து மீண்டும் கிடைத்துள்ளது. இந்திய வில்வித்தை சங்கத்துக்கான அரசு அங்கீகாரம், 8 ஆண்டுகளுக்கு முன் திரும்பப் பெறப்பட்டது.
இந்திய தேசிய விளையாட்டு வளர்ச்சி விதிகள், 2011-ன்படி சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்த தவறியதால், இந்த அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டது. இந்திய வில்வித்தை சங்கத்தின், நிர்வாகிகள் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதன் முடிவுகளை விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தபின் அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை, இந்திய வில்வித்தை சங்கத்தின் தலைவரும், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான அர்ஜூன் முண்டா வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கை, வரலாற்று சிறப்பு மிக்க பொன்னாள்.
இது இந்திய வில்வித்தை குழுவினருக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் உட்பட நீண்ட போராட்டத்துக்குப்பின் அரசு அங்கீகாரம் மீண்டும் கிடைத்துள்ளது’’ என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.