
ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேசத்தில் அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பவர்களை யோகி ஆதித்ய நாத் தலைமையிலான அரசு ஒடுக்குவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணை முதல்வர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹாத்ராஸ் பகுதியில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தை சந்திக்கச் சென்றபோது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது கண்டத்திற்குரியது என்றும் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பேசிய சச்சின் பைலட், ''அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அடக்கி வைக்க முயற்சிக்கிறது.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது முழு நிர்வாகமும் எதிர்க்கட்சியின் குரலை அடக்குவதற்கு எல்லாவகையிலும் முயற்சி செய்கின்றன.
நேற்று ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் என எதையும் பாஜக அரசு நிலைநாட்டவில்லை.
நாடு முழுவதுமே ஹாதராஸ் வன்கொடுமைக்கு எதிராக வெகுண்டெழுந்துள்ள நிலையில், பாஜக அரசு வெறுக்கத்தக்க குற்றத்தை செய்த குற்றவாளிகளை காக்கும் முயற்சியில் அமைதி காத்து வருகிறது'' என்று சச்சின் பைலட் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.