/

ஹாத்ரஸ் வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும்: இறந்த இளம்பெண்ணின் சகோதரர் கோரிக்கை

ஹாத்ரஸ் வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும் என இறந்த இளம்பெண்ணின் சகோதரர் கோரிக்கை வைத்துள்ளார்.

News image
கோப்புப் படம்.
Updated On :16 அக்டோபர் 2020, 2:48 pm

DIN

ஹாத்ரஸ் வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும் என இறந்த இளம்பெண்ணின் சகோதரர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹாத்ரஸில் அண்மையில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டாா். ஆனால், மாநில காவல்துறையோ, அந்தப் பெண்ணின் உடலை துரிதகதியில் தகனம் செய்தனா். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்ப்பட்டவா்களைப் பாதுகாக்க குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை அலாகாபாத் உயா்நீதிமன்ற லக்னெள் அமா்வு, தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசு கோரிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, “‘இந்த விவகாரத்தை அலகாபாத் உயா்நீதிமன்றமே விசாரணை மேற்கொள்ளட்டும். அந்த விசாரணையில் ஏதாவது பிரச்னை எழுந்தால், அதை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் தயாராக உள்ளது’ என்று உத்தரவிட்டது. இந்தநிலையில் ஹாத்ரஸ் வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும் என இறந்த இளம்பெண்ணின் சகோதரர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "வழக்கை தில்லிக்கு மாற்ற வேண்டும் என குடும்பத்தினர் விரும்புகின்றனர். நாங்களும் அங்கு குடியேற விரும்புகிறோம். இது சம்பந்தமாக அரசாங்கம் எங்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் அவர்களைச் சார்ந்து உள்ளோம். நாங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.