உத்தரப்பிரதேசத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகினர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியில் இருந்து கங்கை நதிக்கு புனித பயணம் செல்வதற்காக சாலையோரம் சிலர் காத்திருந்தனர். அவர்களை வழியனுப்பி வைக்க உறவினர்கள் சிலரும் காத்திருந்தனர்.
அப்போது ஜமானியா கோட்வாலி காவல்நிலையம் அருகே கட்டுபாட்டை மீறி வந்த லாரி ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்காள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 16 வயது சிறுமி உள்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தைக் கண்டித்து உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.
லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.