ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா மாகாணத்தில் பயணிகளுடன் சென்ற ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோடா மாகாணத்தின் பல்வேறு இடங்கள் மலைப்பகுதிகளாகவே உள்ளன. இதனிடையே கில்னி பகுதியிலிருந்து ஹம்பல் கிராமத்திற்கு பயணிகளுடன் ஜீப் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, டொமைல் பகுதி அருகே சென்றுக்கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏராளமான மலைப்பாதைகளை உள்ளடக்கிய தோடா மாகாணத்தில் சாலைகள் சரிவர பராமரிக்கப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.