புது தில்லி: பிகாரில் இருப்பவர்கள் கொடுக்கும் உத்தரவின் பேரில் தில்லி, உ.பி. பிகார், என்சிஆர் பகுதிகளில் விலைமதிப்புமிக்க கார்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 6 எஸ்யுவி, டிஜிட்டல் பூட்டைத் திறக்கும் கருவிகள், ஏராளமான போலி கார் சாவிகள், கார் லாக்கர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.
குற்றவாளிகள், மொஹம்மது சஜ்ஜித், சோனு, ஆகாஷ், முன்னா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அனைவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. சஜ்ஜித் மீது மட்டும் பிகாரில் 15 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
புது தில்லியில் ஸ்கார்பியோ கார் திருடுப் போனது குறித்து விசாரணை நடத்திய காவலர்கள், கார் திருட்டுக் கும்பலை பிடித்தனர்.
சம்பவ இடத்தில் கிடைத்த சிசிவிடி காட்சியில், ஒரு ஆட்டோவில் வரும் இரண்டு பேர், காரை ஒரே நிமிடத்தில் பூட்டைத் திறந்து திருடிச் செல்வதைக் கண்டறிந்தனர். ஆட்டோ ஓட்டுநரின் முகவரியைக் கண்டுபிடித்து, கார் திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், பிகாரில் இருக்கும் சிலர், இந்த கார் வேண்டும் என்று கார் திருட்டு கும்பலிடம் கேட்க, அவர்களும் அதே ரக காரை திருடிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
கள்ளச் சாவி போட்டு திருடுவது முதல் டிஜிட்டல் கார் பூட்டை லாவகமாக திறப்பது போன்ற அனைத்து யுக்திகளையும் இவர்கள் கற்றறிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.