நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா நிலவரம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்ததாவது:
"மொத்த கரோனா பாதிப்பில் 5-இல் ஒரு பகுதியினர் மட்டுமே மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளனர். 14 மாநிலங்களில் தலா 5,000-க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வரும் நிலையில் உள்ளனர். 18 மாநிலங்களில் தலா 5,000 முதல் 50,000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கையில், மகாராஷ்டிரத்தில் 29.3 சதவிகிதம், கர்நாடகத்தில் 9.9 சதவிகிதம், ஆந்திரத்தில் 9.4 சதவிகிதம், உத்தரப் பிரதேசத்தில் 6.8 சதவிகிதம் மற்றும் தமிழகத்தில் 4.7 சதவிகிதம் என 5 மாநிலங்களில் மட்டும் 60 சதவிகிதத்தினர் உள்ளனர். பிற மாநிலங்களில் 39.6 சதவிகிதத்தினர் உள்ளனர்.
மே 23-ம் தேதி 50,000 பேர் குணமடைந்திருந்தனர், ஜூன் 3-இல் 1 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், ஜூலை 30-இல் 10 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், ஆகஸ்ட் 19-இல் 20 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், செப்டம்பர் 4-இல் 30 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர், செப்டம்பர் 11-இல் 35 லட்சம் பேர் குணமடைந்திருந்தனர். தற்போது நாடு முழுவதும் 38.5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட 76 லட்சம் பரிசோதனைகள் உள்பட, நாடு முழுவதும் இதுவரை 5.8 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன."