மிசோரம் மாநில சுகாதாரத்துறைச் செயலாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், மிசோரம் மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் லாலெங்மாவியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மிசோரத்தில் புதிதாக 40 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1,468 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுகாதாரத்துறை செயலரும், 10 வயது குழந்தையும் அடங்குவர். புதிதாக பாதிக்கப்பட்டோரில் 35 பேர் அய்ஸ்வால் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மிசோரத்தில் தற்போது 549 பேர் கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று 919 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை அங்கு 51,316 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.