எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாநிலங்களவையில் 8 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட எட்டு எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம்.
Updated On :21 செப்டம்பர் 2020, 6:32 am

PTI

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட எட்டு எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்ட 8 உறுப்பினர்களையும், அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்குமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி. முரளீதரன் அனுப்பிய நோட்டீஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் மீது ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல் குழப்பம் விளைவித்தனா். ஹரிவன்ஷ் மீது விதிமுறைகள் புத்தகத்தை கிழித்து வீச முற்பட்டது, அவையில் காகிதங்களை கிழித்து எறிந்தது, அவரது ஒலிபெருக்கியை பிடுங்க முயற்சித்தது ஆகிய சம்பவங்களால் வெகுநேரம் அமளி நீடித்தது.

இந்த சம்பவங்களால் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஞாயிற்றுக்கிழமை மாலை அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தாா். அவரது இல்லத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் நேரில் கலந்துகொண்டனா். மாநிலங்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நடந்துகொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக வெங்கய்ய நாயுடு கவலையுடன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, அந்த உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வெங்கய்ய நாயுடு விவாதித்து, எட்டு பேரையும் ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.