ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு தளர்வுகள் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அதேநேரத்தில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார். 

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் 50 சதவீத ஊழியர்களுடன் குறிப்பிட்ட அலுவலகங்கள் இயங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

► அதன்படி, அலுவலகத்தின் நுழைவாயில், அலுவலக உணவகம், அலுவலகக் கூட்டம் நடக்கும் இடங்கள், கட்டிடத்தின் முன் வாயில்கள், மின் தூக்கிகள் கழிவுநீர்க் குழாய்கள் இருக்கும் இடங்கள், கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சுத்தமாக தொற்று ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். 

► ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு நிறுவனம் தரப்பில் இருந்து தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.  ஒரு வாகனத்தில் 30 முதல் 40% நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். 

► அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும். 

► பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கியிருக்க வேண்டும். 

► அலுவலகத்தில் முகக்கவசம் அணிவதோடு, அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். தேவையான இடங்களில் கை கழுவும் திரவங்கள், கை சுத்தப்படுத்தும் திரவங்களை வைத்திருக்க வேண்டும். 

► மின் தூக்கிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி 2 அல்லது 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும். 

► 10 நபர்களுக்கு மேல் அலுவலகக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது. கூட்டங்களில் ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். 

► ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் இடையே ஒரு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். 

►அலுவலகத்தில் மது பானங்கள், குட்கா, புகையிலை பயன்படுத்தக்கூடாது. வெளி ஆட்களை அலுவலகத்தினுள் அனுமதிக்கக் கூடாது. 

► அலுவலகத்தின் அருகில் உள்ள மருத்துவமனைகள், கிளினிக்குகள் இருக்கும் இடங்கள் குறித்த பட்டியல் அலுவலகத்தில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். 

► 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனம் அறிவுறுத்த வேண்டும். 

► அனைத்து ஊழியர்களும் அரசின் 'ஆரோக்ய சேது' செயலியை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com