ஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 
ஊரடங்கு உத்தரவு:  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

நாட்டில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,  ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில், ஏப்ரல் 20 ஆம் வரை ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன.

► அதன்படி, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சு வேலை, மெக்கானிக் தொழில் செய்வோர் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

► சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் தங்களது பணிகளைத் தொடரலாம். ஆனால், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். 

► ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம். ஆனால் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். 

► விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி

► மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்களுக்குத் தடை தொடரும்.

► மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க மத்திய அரசு தொடர்ந்து அனுமதி.

► சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் ஏப்ரல் 20 முதல் இயங்கலாம். அதே நேரத்தில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளை கண்டிப்பாக தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.

► ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் கட்டுமானப் பணிகள் நடைபெற அனுமதி. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததாக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்த தளர்வு பொருந்தாது. 

► கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம்.

► மக்கள் நெருக்கம் குறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

► நெடுஞ்சாலையோரம் உள்ள ஹோட்டல்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.

► கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகளை திறக்க அனுமதி.

► அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்கள் திறக்கலாம்.

► மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் தொடர்ந்து செயல்படலாம். 

► ரயில் மற்றும் விமான சேவைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மருந்துப் பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► அதேபோன்று ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கியப் பணிகளுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.

► மக்கள் வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிவது கட்டாயம். வேலை செய்யும் இடங்களிலும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

► தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

► பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது. இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். 

► ஊரகப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள், உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்க அனுமதி.

► இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி. நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் தவிர பின் இருக்கையில் ஒருவர் மட்டும் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com