கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, தான் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா (77 வயது) மற்றும் அவரது மகள் பத்மாவதிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும், அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தனது உடல்நிலை பற்றி எடியூரப்பா விடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
"கவலைப்பட ஒன்றுமில்லை. நான் விரைவில் வீடு திரும்பி பணிகளைத் தொடங்குவேன். தேவையான பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அதில் எந்த சிக்கலும் இல்லை என்பது தெரியவந்தது. நான் விரைவில் குணமடைவேன். அரசுப் பணிகள் எதுவும் பாதிக்கப்படாமல் இருக்க ஞாயிறு முதல் அலுவலர்களுடன் தொடர்பிலேயே உள்ளேன். இன்று மூத்த அலுவலர்களுடனும் பேசினேன்." என்றார் எடியூரப்பா.