சண்டீகர்: ஹரியாணா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தனக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா மாநில உள்துறை அமைச்சராகவும் இருக்கும் அனில் விஜ் (67), சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியாணா மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியில் மிக மூத்த தலைவராக கருதப்படும் அனில் விஜ், அம்பாலா கான்டினென்ட் தொகுதி எம்எல்ஏ ஆவார்.
இந்த நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியை மூன்றாவது கட்ட சோதனை முயற்சியாக கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி 5 தன்னார்வலர்கள் தங்களது உடலில் செலுத்திக் கொண்டனர். அவர்களில் ஒருவராக அனில் விஜ் இருந்தார்.
கரோனா தடுப்பூசியின் சோதனை முயற்சியில் பங்கேற்ற தன்னார்வலராக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட முதல் மாநில அமைச்சர் என்று அனில் விஜ் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.