விஞ்ஞானி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தில்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமையகம் மூடப்பட்டது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) மூத்த விஞ்ஞானி ஒருவர் கடந்த வாரம் மும்பையில் இருந்து தில்லி வந்துள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிவுகள் வந்தன. இதில் விஞ்ஞானிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தில்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் மூடப்பட்டு, வளாகம் முழுவதும் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விஞ்ஞானி கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அதில் ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, விஞ்ஞானியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கவும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.