மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 'தில்லி கரோனா' என்ற செயலியை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒரு மருத்துவமனைக்குச் செல்லும் முன்பு, பொதுமக்கள், இந்த செயலி மூலம், அந்த மருத்துவமனையில் படுக்கை வசதி காலியாக இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்தார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால். அப்போது அவர் கூறியதாவது, தில்லி கரோனா என்ற புதிய செயலி மூலம், தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதி மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட மருத்துவமனைகளின் விவரங்களை எளிதாக அறியலாம்.
தற்போது தில்லியில் உள்ள 302 வென்டிலேட்டர்களில், 210 காலியாக உள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் காலை 10 மணிக்கு, மாலை 6 மணிக்கு என இரண்டு முறை பதிவிடப்படும். மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் பற்றிய விவரங்களையும் அறிய முடியும்.
தில்லியில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருவதை நினைத்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது. உங்கள் வீட்டில் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால், கவலையே படவேண்டாம், அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.