இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதோடு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. எனினும், இந்தியாவில் மும்பை, சென்னை, தில்லி ஆகிய நகரங்களில் கரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், நாட்டில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,86,579-லிருந்து 2,97,535-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் பலியானதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 8,102-லிருந்து 8,498-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,41,029-லிருந்து 1,47,195-ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து 4 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.