நேபாள வரைபடத்தில் இந்தியப் பகுதியை கோருவது நியாயமற்றது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையையொட்டி உள்ள லிபுலெக், காலாபானி மற்றும் லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைக்கும், அந்த நாட்டு அரசின் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக இன்று (சனிக்கிழமை) நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்ததாவது:
"இந்தியப் பகுதிகளை உள்ளடக்கி நேபாளத்தின் வரைபடத்தை மாற்றியமைப்பது பற்றிய அரசியல் சட்டத் திருத்த முன்வரைவை நேபாள நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்கெனவே மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளோம். செயற்கையாக இவ்வாறு நிலப் பகுதிக்கு உரிமை பாராட்டுவது வரலாற்று உண்மை அல்லது சான்றுகளின் அடிப்படையிலானதல்ல, ஏற்கக் கூடியதுமல்ல. தவிர, நிலுவையிலுள்ள எல்லைப் பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பது என்ற நடப்பிலுள்ள நம்முடைய புரிந்துணர்வையும் இது மீறுவதாகும்."