மும்பை தாராவிப் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை கரோனா நிலவரம்:
மும்பையில் இன்று புதிதாக 846 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 42 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 68,481 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 3,842 பேர் பலியாகியுள்ளனர்.
அதேசமயம், இன்று 457 குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,576 ஆக உயர்ந்துள்ளது. 30,063 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 5 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஒரு நாளில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,189 ஆக உயர்ந்துள்ளது.