புது தில்லி: பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதி வழங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஞாயிறன்று தில்லியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிசேக் மனு சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சீனா நமது ராணுவ வீரர்களை கொன்றிருக்கும் ஒரு சூழலில், பிரதமர் ஏன் பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீனாவிடம் இருந்து பணத்தைப் பெறுகிறார்? சர்சைக்குரிய ஹுவேய் நிறுவனத்திடம் இருந்து பிரதமர் ரூ.7 கோடி நிதி பெற்றுள்ளாரா? அந்த நிறுவனத்திற்கு சீன ராணுவத்துடன் நேரடியாகத் தொடர்பு இல்லையா? ‘டிக் டாக்’ செயலியின் உரிமையாளரான நிறுவனம் சர்சைக்குரிய பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு ரூ.30 கோடி நிதி ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதா?
சீனாவில் இருந்து 38 சதவீத முதலீட்டைக் கொண்டுள்ள பே டிஎம் நிரோனம் ரூ. 100 கோடியும், ஒப்போ – ரூ. 1 கோடி மற்றும் சியோமி நிறுவனம் – ரூ . 15 கோடியும் அந்த நிதியத்திற்கு கொடுத்திருக்கின்றதா?
பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு வந்த நிதிகளை பிரதமர் பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு திருப்பி விட்டு விட்டாரா? எத்தனை நூறு கோடிகள் அவ்வாறு திருப்பி விடப்பட்டது?
மே மாதம் 20-ஆம் தேதி நிலவரப்படி, பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு ரூ 9,678 கோடி வந்து சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனப் படைகள் நமது எல்லைக்குள் ஊடுருவினாலும், பிரதமர் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெற்றுள்ளார் என்பது அதிர்ச்சியான விஷயம்..
பி.எம் கேர்ஸ் நிதியத்தின் சட்ட அங்கீகாரம், அது செயல்படும் விதம், அங்கு நிதி எவ்வாறு கையாளப்படுகிறது? எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? என்பது குறித்தெல்லாம் யாருக்கும் தெரியவில்லை. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் உட்பட எந்த ஒரு பொது அமைப்பும் அதனைக் கண்கானிக்கவோ, கேள்வி கேட்கவோ முடியாது. இது ஒரு பொது அமைப்பே அல்ல என்று சொல்லும் அளவுக்கு பிரதமர் அலுவலகம் சென்று விட்டது.
வெளியில் தெரியாத ரகசிய முறையில், வெளிப்படைத் தன்மையற்று இந்த நிதியை பிரதமர் மட்டும்தான் கையாள்வதாகத் தெரிகிறது.
இப்படி நடந்து கொள்ளும் பிரதமரால் எவ்வாறு சீனாவின் நடவடிக்கையில் இருந்து இந்தியாவைக் காக்க முடியும்?
இச்சூழலில் பிரதமர் துளியும் வெட்கமின்றி இந்திய நிலத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்து, முரணான தகவல்கள் மூலம் நாட்டைத் தவறாக வழி நடத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.