நாடு முழுவதும் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களைப் பொருத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் இயல்பான போக்குவரத்துக்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.
சிவப்பு மண்டலங்களில் விமானம், ரயில், மெட்ரோ மற்றும் சாலைப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்படுகிறது. எனினும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள விஷயங்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்கும் விமான, ரயில், சாலைப் போக்குவரத்து வழியாக தனி நபர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
சிவப்பு மண்டலங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கால் டாக்சி, ஆட்டோ ரிக்ஷா இயங்கத் தடை தொடரும். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடரும்.
சிவப்பு மண்டலங்களில் நான்கு சக்கர வானங்களில் ஓட்டுநர் உள்பட இருவர் பயணிக்கலாம். இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
ஆரஞ்சு மண்டலங்களில் கால் டாக்சி இயங்கலாம். ஆனால், ஓட்டுநருடன் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் மற்றொருவரும் பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே தனி நபர்களோ, வாகனங்களோ அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு செல்லலாம்.
பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம். பஸ் டெப்போக்களில் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.