உடல்நலக் குறைவால் சென்னையில் காலமான கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பத்மபூஷண் விருது பெற்ற பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞரான டி.என்.கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பதிவில் டி.என்.கிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில்,“பிரபல வயலின் கலைஞரான டி.என். கிருஷ்ணனின் மறைவு இசை உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அவர் இளம் இசைக்கலைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.