பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்களும் வெளியாகியுள்ளன.
பிகாரில் தற்போது கிடைத்திருக்கும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பாஜக - ஜேடியு கூட்டணி 114 இடங்களில் முன்னிலையில் உள்ளன. தனித்துப் போட்டியிட்ட பாஸ்வானின் லோக் ஜன சக்தி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை துவங்கிய போது, முன்னிலை வகித்து பாஜக கூட்டணி, பிறகு பின்தங்கிய நிலையில், தற்போது 114 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. திருமணத்துக்கு முந்தைய புகைப்பட நிகழ்ச்சியில் விபத்து; மணமக்கள் பலியான சோகம்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், இழுபறி நிலவி வருகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் 55 மையங்களில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆர்ஜேடி 59 தொகுதிகளிலும், பாஜக 48 தொகுதிகளிலும், ஜேடியு 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 122 தொகுதிகள் வேண்டும் என்ற நிலையில், இரு பெரும் கட்சிகளுமே 110 என்ற இடங்களிலேயே முன்னிலை வகித்து வருவதால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நிலை நீடிக்கும் என்றும், பாஸ்வானின் லோக் ஜன சக்தி, எந்தக் கட்சி ஆட்சியமைக்கும் என்பதை முடிவெடுக்கும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.