பாஜக தேசிய துணைத் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வினய் சஹஸ்ரபுத்தே-க்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஜக எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தேவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று தெரிய வந்துள்ளது.
இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்துள்ளது. எனவே, அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ளார். ஆனால் நேற்று இரவு லேசான தலைவலி, காய்ச்சல் இருந்ததையடுத்து மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், வினய் சஹஸ்ரபுத்தேவுக்கு கரோனா 'பாசிட்டிவ்' என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.