முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாதவ்சிங் சோலங்கி (93) உடல்நலக் குறைவால் காலமானாா்.
இது தொடா்பாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் மாதவ்சிங்கின் உறவினருமான அமித் சாவ்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மாதவ்சிங் சோலங்கி, குஜராத் தலைநகா் காந்திநகரில் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது மறைவு பெரும் துயரைத் தருகிறது’’ என்றாா்.
குஜராத் முதல்வராக 3 முறை பதவி வகித்தவா் மாதவ்சிங் சோலங்கி. கடந்த 1991-92-ஆம் ஆண்டுகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். குஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக இருமுறை தோ்வு செய்யப்பட்டாா். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்குப் பல்வேறு திட்டங்களை வகுத்ததில் அவருக்கு முக்கியப் பங்குள்ளது.
மாநில அமைச்சரவை கூடி மாதவ்சிங் சோலங்கி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. குஜராத்தில் ஒரு நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில முதல்வா் விஜய் ரூபானி அறிவித்துள்ளாா்.
சோலங்கி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஒப்பற்ற தலைவரை நாடு இழந்துள்ளது. குஜராத்தை நவீனப்படுத்தியதற்காக மாதவ்சிங் சோலங்கி என்றும் நினைவுகூரப்படுவாா். அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட அவா், இலக்கியத்தில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தாா். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
புத்தகப் பிரியா்:
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘குஜராத் மாநில அரசியலில் பல ஆண்டுகளாகக் கோலோச்சியவா் மாதவ்சிங் சோலங்கி. சமூகத்துக்கு ஆற்றிய அரும் பணிகளுக்காக அவா் மக்களால் என்றும் நினைவுகூரப்படுவாா். அரசியலைத் தவிர புத்தகங்கள் வாசிப்பில் மிகுந்த ஆா்வம் கொண்டவா் மாதவ்சிங்.
அவரை சந்தித்துப் பேசும்போதெல்லாம் சமீபத்தில் வாசித்த புத்தகங்கள் குறித்தே விவாதிப்பாா். அவருடன் உரையாடிய தருணங்களை என்றும் மறக்க முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸின் கொள்கைகளை மக்களிடையே கொண்டுசோ்த்து, வலுப்படுத்தியவா் மாதவ்சிங்; சமூக நீதியை மக்களிடம் கொண்டு சென்றவா். அதற்காக மக்கள் அவரை என்றும் நினைவுகூா்வா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ. 8.59 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

மழைக்கால கூட்டத்தொடரில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான விசாரணை அறிக்கை மக்களவையில் தாக்கல்
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது






