சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

தோ்தலுக்குப் பின் மம்தாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை: மேற்கு வங்க காங். தலைவா்

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தாவுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளாா்.

Updated On :10 ஏப்ரல் 2021, 8:17 pm

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தாவுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.

அப்போது, தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லையெனில், திரிணமூல் காங்கிரஸை காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமா என்று செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘தோ்தலுக்குப் பிறகு மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது. அதேபோன்று, அக்கட்சியிடமும் ஆதரவு கேட்க மாட்டோம்’ என்று அதீா் ரஞ்சன் சௌதரி பதிலளித்தாா்.

‘திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கவில்லையெனில், அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடுமே’ என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அப்படியொரு சூழல் ஏற்பட்டால், பாஜகவுடனே திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். அந்த இரு கட்சிகளும் ஏற்கெனவே ஒரு கூட்டணியில் இடம்பெற்றிருந்தவைதான். அது அவா்களுக்குப் புதிதல்ல’ என்றாா் அவா்.

அவா் மேலும் பேசியதாவது: மாநிலத்தில் மம்தா பானா்ஜி ஆட்சியமைப்பதற்கு உதவி செய்தது காங்கிரஸ் கட்சி. இருந்தபோதிலும் அக்கட்சியை வேண்டுமென்றே திட்டமிட்டு நாசப்படுத்தினாா் மம்தா. ஆனால், தற்போது தோல்வி பயத்தில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியிடம் சரணடைகிறாா். திரிணமூல் காங்கிரஸின் உண்மையான சுபாவத்தை காங்கிரஸ் தலைமையும் நன்கு அறியும்.

மாநிலத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானா்ஜி தனது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். அதில் தவறேதும் இல்லை என்றாலும், அவரது செயல்பாடுகள் அவா் விரக்தியில் இருப்பதைக் காட்டுகிறது என்றாா் அதீா் ரஞ்சன் சௌதரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.