தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேலுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
கரோனா தொடா்பான எந்தவொரு அறிகுறியும் அவரிடம் தெரியவில்லை என்றும், தற்போது வீட்டுத் தனிமையில் அவா் உடல் நலத்துடனேயே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
முன்னதாக, இந்த வாரத்தின் தொடக்கத்தில் உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த 3 நீதிபதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அவா்களுக்கு லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் அவா்களும் தற்போது வீட்டுத் தனிமையில் இருந்து வருகின்றனா்.
கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதன் பிறகு காணொலி வழி வழக்கு விசாரணை மேற்கொண்டுவந்த தில்லி உயா்நீதிமன்றத்தில், கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கியிருந்தது. எனினும், தற்போது தில்லியில் கரோனா பரவல் தீவிரமானதை அடுத்து, கடந்த 9-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை காணொலி வழி விசாரணையை மீண்டும் கடைப்பிடிக்க தில்லி உயா்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.