மகாராஷ்டிரத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளைக் கண்காணித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் குழு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேற்கு மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதையும் படிக்க | உத்தரவ் தாக்கரேவை முற்றுகையிட்ட பாஜகவினர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பில்வாடி, அன்கால்க்கோப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் முதல்வர் தாக்கரே பேசியதாவது, ''வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்புப் பணிகளையும் விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வையும் எடுக்க வேண்டும்.
அதற்காக குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து நிரந்தர தீர்வு காணப்படும்.
நீர்நிலை வழிகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அகற்றப்படும். மேலும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலுள்ள நீரை மழை பெய்யாத வறண்ட பகுதிகளுக்கு கொண்டுசெல்வது குறித்தும் பலர் பரிந்துரை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து பரிசீலனை செய்து, வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறினார்.