ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 78 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 50.62 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 78 கோடி கரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை தரவுகளின்படி கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் முறையே ஆகஸ்ட் மாதத்தில் 25.5 கோடி தடுப்பூசிகளும், செப்டம்பர் மாதம் 26 கோடி தடுப்பூசிகளும், அக்டோபர் மாதம் 28 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்திருந்தாலும் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 11 கோடியாக மட்டுமே உள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,969 பேருக்கு கரோனா
நடப்பாண்டு இறுதிக்குள் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மொத்தம் 136 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வயதுவந்தோர் மொத்தம் 95 கோடி பேர் உள்ள நிலையில் மொத்தம் 190 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. நாட்டில் தற்போது 5 கரோனா தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.