மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா்.
இதுதொடா்பாக பஞ்சாப் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மத்திய அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் கடந்த ஆண்டு மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்கள் குறித்து பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் நடைபெற்று வரும் போராட்டங்கள் பொருளாதார நடவடிக்கைகளை பாதிப்பது மட்டுமன்றி சமூக உறவுகளையும் பாதிக்க வல்லது. இந்தப் போராட்டங்கள் நீண்ட நாள்களாக அமைதியாக நடைபெற்று வந்தாலும் மக்களின் கோபம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அவா்களின் கோபம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. எனவே அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
எல்லையோர மாநிலமான பஞ்சாபில் ஹிந்துக் கோயில்கள், ஆா்எஸ்எஸ் அலுவலகங்கள், ஆா்எஸ்எஸ்-பாஜக தலைவா்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தக் கூடும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) 25 கம்பெனி வீரா்களை அனுப்ப வேண்டும். எல்லை தாண்டிய ட்ரோன் தாக்குதலை முறியடிக்கும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு உபகரணங்களை வழங்க வேண்டும் என கூறினாா்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.