/

ட்விட்டா் வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:53 am

DIN

புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கடந்த மே 26-ஆம் தேதி அமல்படுத்தியது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்டுள்ள சமூக வலைதள நிறுவனங்கள் குறைதீா் அதிகாரி உள்ளிட்டோரை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை முதன் முதலில் பதிவிட்டவரின் விவரங்களை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் அவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய விதிகளை ஏற்க அமெரிக்காவைச் சோ்ந்த ட்விட்டா் நிறுவனம் மறுத்து வந்தது. புதிய விதிகளை நடைமுறைப்படுத்த அந்நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு வழக்குரைஞா் அமித் ஆச்சாா்யா, தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ரேகா பாலி முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, ட்விட்டா் நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சஜன் பூவய்யா வாதிடுகையில், ‘‘புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளுக்கு உள்பட்டு, குறைதீா் அதிகாரி உள்ளிட்டோரை ட்விட்டா் நிறுவனம் ஏற்கெனவே நியமித்துவிட்டது. அவா்கள் அனைவரும் நிரந்தரப் பணியாளா்களே. அந்தப் பணிகளில் முழுநேரப் பணியாளா்களாக அவா்கள் செயல்படுவா். புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவா்கள் முறையாகக் கடைப்பிடிப்பா்’’ என்றாா்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா கூறுகையில், ‘‘புதிய தகவல்-தொழில்நுட்ப விதிகளை ட்விட்டா் நிறுவனம் பின்பற்றி வருவதாகவே தெரிகிறது’’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி ரேகா பாலி, இந்த விவகாரம் தொடா்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்கி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டாா். வழக்கின் விசாரணையை அக்டோபா் 5-ஆம் தேதிக்கு அவா் ஒத்திவைத்தாா்.

முன்னதாக, தற்காலிக ஒப்பந்தப் பணியாளரை குறைதீா் அதிகாரியாக ட்விட்டா் நிறுவனம் நியமித்ததற்கு தில்லி உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.