தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இரு மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்தார்.
அதற்கு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
மேலும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் பிரதமர் விசாரித்தார். கரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களுக்கும், செய்த உதவிகளுக்கும், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் சட்ட முன் வரைவிற்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், பிரதமர் அளித்த ஊக்கத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டதாக, இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.