நாட்டில் இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இதையும் படிக்க | ஒலிம்பிக் வீரர்களுக்குப் பாராட்டு: பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடியின் உரை:
"பிரிவினையின்போது நாட்டு மக்கள் சந்தித்த துயரங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆகஸ்ட் 14-ஐ பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
கரோனா பெருந்தொற்றை இந்தியர்கள் மிகுந்த பொறுமையுடன் எதிர்கொண்டனர். நம்முன் பல சவால்கள் இருந்தன. ஆனால், அனைத்துத் துறைகளிலும் சிறப்பான வேகத்தில் செயல்பட்டோம். இந்தியத் தொழில் துறையினர் மற்றும் விஞ்ஞானிகள் பலத்தின் வெளிப்பாடுகள்தான் இவை. இன்றைக்கு நாம் தடுப்பூசிக்காக மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கத் தேவையில்லை.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவதை நாம் பெருமையுடன் கூறலாம். இதுவரை 54 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
எல்லா நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளிலும் புதிய உறுதிமொழிகளுடன் முன்னோக்கி செல்வதற்கான ஒரு தருணம் வரும். அந்தத் தருணம் தற்போது இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் வந்துள்ளது."