ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் இந்திய ஆலோசகர் அஜித் தோவல் திங்கள்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
இதையடுத்து, ஆப்கனில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கிருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்திற்குள் வந்ததால் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பின், காபூல் விமான நிலையத்திலிருந்து அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இதையும் படிக்க | ஆப்கனில் தலிபான் ஆட்சி: அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலா?
காபூல் விமான நிலையம் முழுவதும் அமெரிக்க படைகளின் பாதுகாப்பில் உள்ளதால், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்திய தூதரக அதிகாரிகள் காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும், காபூல் விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப் படையில் சி-17 ரக விமானம் கிளம்புவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று இரவு 120 பேரும், இன்று காலை 129 அதிகாரிகளும் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.