கரோனா பரவல் கவலையளிக்கும் விதமாக உள்ள நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது என ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.
அரசின் சொத்துகளின் மூலம் பணமாக்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்ததிலிருந்து, இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமரிசனங்களை முன்வைத்துவருகிறார்.
இந்நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டுகிறது என ராகுல் காந்தி இன்று விமரிசித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "அதிகரித்துவரும் கரோனா பரவல் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அடுத்த அலையில் தீவிரமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்த வேண்டும்.
இதையும் படிக்க | ஆப்கனிலிருந்து பயங்கரவாதம் ஊடுருவினால் ஒடுக்கப்படும்: முப்படை தளபதி
மக்கள் அனைவரும் தங்களை தாங்களே பார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில், சொத்துகளை விற்பதில் அரசு மும்முரம் காட்டிவருகிறது" என பதிவிட்டுள்ளார். பெருந்தொற்றை கையாண்ட விதம், தடுப்பூசி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட தேசிய தடுப்பூசி விநியோக திட்டம், தடுப்பூசி விலை நிர்ணயம், கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளை முன்வைத்து ராகுல் காந்தி தொடர் விமரிசனங்களை முன்வைத்துவருகிறார்.