அரசிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட சுரங்கத்திலிருந்து மத்தியப் பிரதேச விவசாயி ஒருவருக்கு 6.47 காரட் வைரம் கிடைத்துள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் பண்ண மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் மஜூம்தார் என்ற விவசாயிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறாவது முறையாக சுரங்கத்திலிருந்து உயர் தர வைரம் கிடைத்துள்ளது. இம்முறை, அரசிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட சுரங்கத்திலிருந்து 6.47 காரட் வைரம் கிடைத்துள்ளது.
ஜருபூர் கிராமத்தில் உள்ள சுரங்கத்திலிருந்து பிரகாஷ் இந்த வைரத்தை எடுத்துள்ளார் என வைர பொறுப்பலுவலர் நுதன் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "6.47 காரட் வைரம் ஏலத்தில் விடப்படும். அதற்கான விலை அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்" என்றார்.
இதுகுறித்து மஜூம்தார் கூறுகையில், "ஏலத்தில் கிடைக்கும் பணத்தை சுரங்க குவாரியின் கூட்டாளிகளுடன் நான் பகிர்ந்து கொள்வேன். நாங்கள் மொத்தம் ஐந்து பேர் உள்ளோம். கிடைத்த 6.47 காரட் வைரத்தை அரசின் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளோம். கடந்தாண்டு 7.44 காரட் வைரம் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 முதல் 2.5 காரட் விலைமதிப்பற்ற வேறு கற்களும் கிடைத்துள்ளது" என்றார்.
வைரம் ஏலம் விட்டப்பிறகு கிடைக்கும் பணத்திலிருந்து அரசுக்கு கொடுக்க வேண்டிய ராயல்டி மற்றும் வரிகளை பிடித்து கொண்டு மீதமுள்ள பணம் விவசாயிக்கு வழங்கப்படும் என அரசு அலுவலர் தெரிவித்துள்ளார். 6.47 காரட் வைரத்தின் விலை 30 லட்சமாக கணிக்கப்பட்டுள்ளது.