பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும்
பண்டிகை காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்


பண்டிகை காலத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டாா். இது தொடா்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஒருசில மாநிலங்களைத் தவிர நாட்டில் கரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.
சில மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகமாகவே உள்ளது. அந்த மாவட்டங்களில் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
தொற்று பரவல் அதிகரிப்பதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து, மற்ற இடங்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வரும் நாள்களில் பண்டிகைகள் அதிகமாக வரவுள்ளன. அத்தகைய சமயங்களில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கூட்டமாகக் கூடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
சில இடங்களில் மக்கள் முகக் கவசம் அணியாமல் கூடுவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருப்பதும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. கரோனா விதிமுறைகளை மீறுபவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதமும் குறைந்து வருகிறது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறாா்களா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
5-அம்ச நடவடிக்கை: மக்கள் கூடும் இடங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தவறாமல் கடைப்பிடிக்கப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பது, அவா்களுடன் தொடா்பில் இருந்தோரை விரைந்து தனிமைப்படுத்துவது, கரோனா தடுப்பூசி திட்டத்தைத் துரிதப்படுத்துவது, தொற்று பரவலைத் தடுப்பதற்கான செயல்பாடுகளைக் கடைப்பிடிப்பது ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். கரோனா தொற்று விவகார மேலாண்மையில் மாவட்டங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். கரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...