பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சம்ஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது என்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், சம்ஸ்கிருதத்தை போற்றிப் பாதுகாக்குமாறு குடிமக்களை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அதன் எண்ணங்கள் மற்றும் இலக்கிய நூல்களின் ஊடாக, அறிவையும் தேசிய ஒற்றுமையையும் வளர்க்க உதவுகிறது, சம்ஸ்கிருத இலக்கியம் மனிதகுலத்தின் தெய்வீக தத்துவத்தை உள்ளடக்கியது மற்றும் அதனுடைய அறிவு அனைவரின் கவனத்தையும் கவரும் என்றார்
தொடர்ந்து, சமீப காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் சம்ஸ்கிருதத்தைப் பற்றிய புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. நமது பாரம்பரியத்தை பேணி, பாதுகாத்து, புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நமது கூட்டு கடமையாகும். எதிர்கால தலைமுறையினருக்கும் இதற்கானஉரிமை உண்டு. இந்த பணிகளுக்காக அனைவரின் முயற்சியையும் அதிகரிக்க வேண்டிய நேரம் இது.
சம்ஸ்கிருதத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள யாராவது உங்களுக்குத் தெரிந்தால், அவர்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் #CelebratingSanskrit என்ற ஹேஷ்டேக்கில் பதிவிடுங்கள்
வெளிநாடுகளில் சம்ஸ்கிருதம் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பலரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரட்கர் கோர்டென்ஹோர்ஸ்ட் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். இவர் அயர்லாந்தில் குழந்தைகளுக்கு சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார்.
இந்தியா-அயர்லாந்து மற்றும் இந்தியா-தாய்லாந்து இடையே கலாசார உறவுகளை வலுப்படுத்துவதில் சம்ஸ்கிருத மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. டாக்டர் சிரபத் பிரபாண்டவித்யா மற்றும் டாக்டர் குசுமா ரக்ஷாமணி ஆகிய இருவரும் இந்த பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்கள் தாய்லாந்தில் ]சம்ஸ்கிருத மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகின்றனர்.
அத்தகைய மற்றொரு பேராசிரியர் ஸ்ரீமான் போரிஸ் ஜக்கரின், ரஷியாவில் மாஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பிக்கிறார். அவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் சம்ஸ்கிருதத்திலிருந்து ரஷ்ய மொழியில் பல புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார்.
மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழி கற்பிக்கப்படும் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி சம்ஸ்கிருத பள்ளியில் சம்ஸ்கிருத இலக்கண முகாம், சம்ஸ்கிருத நாடகங்கள் மற்றும் சம்ஸ்கிருத தினம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்றார்.
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலக சம்ஸ்கிருத தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.