குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வில் கேட்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு தெரிவித்து காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
'குஜராத்தில் 2002ம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை, எந்த அரசியல் கட்சி ஆட்சி செய்யும் போது நடைபெற்றது?' என்ற கேள்வி சிபிஎஸ்இ பிளஸ் 2 முதல் பருவ சோஷியாலஜி பாட தேர்வில் இடம்பெற்றது.
இந்த கேள்விக்கு, பாஜக, காங்கிரஸ், ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி என 4 விருப்ப பதில்கள் கொடுக்கப்பட்டன. அதில் ஒன்றை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில், உடனடியாக சிபிஎஸ்இ தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ ட்விட்டர் பக்கத்தில், 'பிளஸ் 2 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி முறையற்றது. கேள்வித்தாள் அமைப்பதற்காக வந்த ஆசிரியர்கள், சிபிஎஸ்இ விதிமுறைகளை மீறியுள்ளனர். தவறு நடந்துள்ளதை சிபிஎஸ்இ ஒப்பு கொள்கிறது. சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என பதிவிட்டது.
"பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். நடு நிலைத்தன்மையுடன் கேள்விகள் அமைய வேண்டும். சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது என்பதை வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது" என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.
இந்த கேள்வி என்சிஇஆர்டி 12 ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகமான ‘இந்திய சமூக' வியலில், ‘கலாசார வேற்றுமையின் சவால்கள்’ என்ற அத்தியாயம் கீழ் உள்ள ஒரு பத்தியிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.